சப்தரிஷிகளில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் முதன்மையானவராகவும் இருப்பவர் அகத்தியர். தாரகன் முதலிய அரக்கர்கள் உலக மக்களை துன்பப்படுத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியர் பிறந்தாரறு என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் பிறந்தனர் என்றும், குடத்திலிருந்து பிறந்ததால் அகத்தியருக்கு குடமுனி, கும்பயோகி என்னும் பல பெயர்களும் உள்ளது எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படும் அகத்தியரின் பிறந்த தினம் சித்த மருத்துவ தினமாக இன்றைய காலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அகத்தின் உள்ளே ஈசனை கண்டதால் அகத்தியர் என்று அழைக்கப்படுகின்றார் எனவும் ஒரு கருத்து உள்ளது.
அகத்தியர் பிறப்பிற்கு காரணமான சம்பவத்தின் போது தேவர்களை வருத்திய அசுரர்கள் மீண்டும் ஒருமுறை மக்களை துன்பப்படுத்த ஆரம்பித்தனர். அப்போது இந்திரன் அவர்களை அழிக்க வரும் போது அசுரர்கள் அப்போதும் கடலுக்குள் சென்றே ஒளிந்து கொண்டனர். அதனால் இந்திரன் அகத்தியரிடம் உதவி கேட்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் தானே குடித்து விட்டார்.
பின் இந்திரன் அசுரர்களை கண்டுபிடித்து அழித்தார். அதன்பின் குடித்த சமுத்திர நீரை மீண்டும் கடலுக்குள் விட்டார் அகத்தியர். தொடர்ந்து அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமிருந்து அரிய பல சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
அப்போது மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்தே இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலை இன்னும் உயரவில்லை என்று மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவரும் அகத்தியர் தான். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்தார்.
தமிழை ஆதிசித்தன் சிவபெருமானிடமிருந்து கற்றுக்கொண்டு தென் திசைக்கு வந்தார். வரும் வழியில் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை அவர் ஆற்றில் குளிக்க சென்ற நேரத்தில் விநாயகர் ‘காகம் உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறாக உருவாகியது என அகத்தியர் வரலாறு கூறுகிறது.
பின் அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து அங்கிருத்தபடியே சிவபெருமான் திருமண காட்சியை கண்டார். தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் தமிழின் முதல் இலக்கண நூலை எழுதினார். தொல்காப்பியத்திற்கும் முந்தைய நூலான இந்த அகத்தியம் நூல் நமக்கு கிடைக்கவில்லை. அகத்தியம் பற்றிய வேறு எந்த ஒரு குறிப்பும் தொல்காப்பியத்தில் எங்கும் குறிக்கப்படவும் இல்லை.
ஒருமுறை இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுத்து நடத்தியதும் அகத்தியர் தான். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஒரு ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடம் எடுத்து வந்தார்.. அப்போது அவர் தங்கியிருந்த பகுதி அவருக்கு பின் ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு கொடுத்த கொடை அளவிட முடியாதது. பல கடும் நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நம் அகத்தியர் அவர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் மனித உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விரிவான விளக்கத்தை கூட கொடுத்துள்ளார்.
அகத்தியம் என்பது ஒரு மரபு. அந்த மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அகத்தியர் தொடாத விஷயங்களே இல்லை.அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் கூறியிருக்கிறார். அகத்தியர் அஷ்டமா சித்தி மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும் விளக்கி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் நமக்கு கிடைத்தவை குறைவு தான்.
அகத்திய முனிவரை பற்றிய தகவல்கள் ரிக்,யஜுர்,சாம,அதர்வணம் என நான்கு வேதங்களிலும் எழுதப்பட்டுள்ளது. அடுத்ததாக அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை இப்படி தமிழில் உள்ள பெரும்பாலான நூல்களிலும் அகத்தியர் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. காலத்தை கடந்து பல நூல்களிலும் அகத்தியரின் குறிப்புகள் இருப்பதால், அவரின் பெருமைகள் அன்றைய காலகட்டத்தில் உலகறிந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இப்படி பல சிறப்புகளை பெற்ற அகத்தியர் 12000 ஆயிரம் ஆண்டுகள் முன் பாரதத்தில் பிறந்து உலகம் முழுக்க பயணித்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி நிறைவாக திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் அகத்தியர் சமாதி அடைந்ததாக கூறப்பட்டாலும் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோயிலிலும் இவர் சமாதி இருப்பதாக வரலாறு குறிப்பிடுகிறது. மனமுருகி அகத்தியரை வணங்கும் ஒவ்வொருவருக்கும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பார்.