புதன்கிழமை அன்று, ஆர்டெமிஸ் 1 திட்டத்தில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலத்துடன் 47 நிமிடங்களுக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து விண்கலத்திற்கும், விண்கலத்தில் இருந்து பூமிக்கும் என இரண்டு வழிகளிலும் தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும், ஒரே இரவில் தொடர்பு இணைப்புகள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டன எனவும் நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் பொறியாளர்கள், திறம்பட செயலாற்றி, குறுகிய காலத்தில் தொடர்புகளை மறுகட்டமைப்பு செய்துள்ளனர். தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணம் குறித்து நாசா விஞ்ஞானிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், விண்கலத்துக்கு எந்த வித பாதிப்பும் நேரவில்லை எனவும், தொடர்பு மட்டுமே துண்டிக்கப்பட்டதாகவும் நாசா தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து வெளியேறி வருகிறது. இன்றைய தினம், நிலவிலிருந்து நெடுந்தூரப் பாதைக்கு ஓரியன் விண்கலம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.