பெண்மையை போற்றும் வகையில் 'கலைஞர் எழுதுகோல் விருதை' தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் இந்தாண்டு மட்டும் ஒரு பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கி கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கலைஞர் எழுதுகோல் விருது – 2022ம் ஆண்டிற்கான ஏற்கனவே பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுடன், கூடுதல் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
மேலும், கலைஞர் எழுதுகோல் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள், விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.