குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, இன்று, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. அதனாலேயே, கட்சி வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. எனவே, அதே உத்தியை குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலிலும் பின்பற்ற கட்சியின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் வேட்பாளராக யாரை களம் இறக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு கேட்கப்பட்டது. கடந்த அக்டோபர் 29ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக் கணிப்பு குறித்த செய்தியை வெளியிட்டார்.
குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் இத்தாலியா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான் காத்வி மற்றும் பொதுச் செயலாளர் மனோஜ் சோராதியா ஆகியோரின் பெயர்கள் கருத்துக்கணிப்பில் கொடுக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்பு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான் காத்வி குஜராத் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பொதுமக்களின் 73 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. பத்திரிகை துறையைச் சேர்ந்த இசுதான் காத்வி, தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.