அசோக் லேலண்டின் மின்சார இலகு ரக சரக்கு வாகனங்கள் 6 மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் - தீரஜ் ஹிந்துஜா

August 30, 2022

அடுத்த ஆறு மாதங்களுக்குள், மின்சார இலகு ரக சரக்கு வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீரஜ் ஹிந்துஜா தெரிவித்துள்ளார். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய சரக்கு வாகனங்களான படா தோஸ்த் ஐ1 மற்றும் ஐ2 வாகனங்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய தீரஜ் ஹிந்துஜா, இலகுரக சரக்கு வாகனத் துறையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா […]

அடுத்த ஆறு மாதங்களுக்குள், மின்சார இலகு ரக சரக்கு வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீரஜ் ஹிந்துஜா தெரிவித்துள்ளார்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய சரக்கு வாகனங்களான படா தோஸ்த் ஐ1 மற்றும் ஐ2 வாகனங்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய தீரஜ் ஹிந்துஜா, இலகுரக சரக்கு வாகனத் துறையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர், இலகுரக வாகனங்களுக்கான தேவை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, இந்த துறையில் தனித்துவத்துடன் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இந்தத் துறையில் 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை நாங்கள் எதிர்நோக்குகிறோம். குறிப்பாக, படா தோஸ்த் வகை வாகனங்கள், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விற்பனையை அதிகப்படுத்தும் என்று நம்புகிறோம். மேலும், உலகின் முதல் 10 சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் வளர்ச்சி அடைவதில் இந்த வாகனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் என்று கருதுகிறோம். அத்துடன், சரக்கு வாகனத் துறையில், அடுத்த 6 மாதத்திற்குள் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளோம்" என்று கூறினார். அத்துடன், புதிய வாகனங்களின் தனித்துவங்கள் குறித்தும் அவர் பேசினார். அவரது உரையில், படா தோஸ்த் ஐ1 வாகனம் 1250 கிலோ மற்றும் ஐ2 வாகனம் 1425 கிலோ வரை தாங்கு திறன் கொண்டது என்று கூறப்பட்டது. அத்துடன், 1750 மில்லி மீட்டர் அகலத்துடன், ஐ1 ரக வாகனம் 2596 மில்லி மீட்டர் நீளமும், ஐ2 ரக வாகனம் 2745 மில்லி மீட்டர் நீளமும் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வாகனங்கள் பயன்பாட்டாளருக்கு நல்ல லாபத்தைத் தரும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. பின்னர் பேசிய, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலகுரக வாகனப் பிரிவின் தலைவர் ராஜத் குப்தா, “சிறிய தூர மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்களில், பயணிகள் வாகனத்தைப் போன்றே சாவி இல்லாமல் உள் செல்லும் அம்சம் இடம்பெற்றுள்ளது. மேலும், திருட்டை தடுக்கும் அம்சமும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், பயணங்களுக்கு இடையில் ஓய்வெடுப்பதற்கு வசதியாக, இருக்கையை மெத்தையாக மாற்றும் அமைப்பும் இந்த வாகனங்களில் இடம்பெற்றுள்ளது. எனவே, தோஸ்த் மற்றும் படா தோஸ்த் மாடல் வாகனங்கள் வெற்றிகரமாக விற்பனையாகி வருகின்றன. தற்போதைய அளவில், சுமார் 35 ஆயிரம் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த துறையில் தொடர்ந்து நல்ல முறையில் வளர்ச்சி அடைய நிறுவனம் முனைகிறது” என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu