பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மிதிவண்டிகள் வழங்க அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அசாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசின் இந்த அறிவிப்பு, பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசாம் மாநில பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 75% மற்றும் மாணவிகள் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் பட்சத்தில், ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கிட்டத்தட்ட 3.78 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா “கல்வியை மேம்படுத்தவும், மாணவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்கவும் அசாம் மாநிலத்தின் சிறந்த முன்னெடுப்பாக இந்த திட்டங்கள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.