அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பலர் விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்வு வாரியத்தில் அந்த தேர்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் சுமார் 10,000 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளாக இந்த பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் உதவி பேராசிரியர் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நிலைப்பாடு என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.