உலக அளவில் கோவிஷில்ட் தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜன்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
அஸ்ட்ராஜன்கா நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கின. இது இந்தியாவில் கோவிஷில்ட் என்ற பெயரில் 175 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும், பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் நிறுவனம் ஆவணம் தாக்கல் செய்தது. அதில் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி ரத்த உறைதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் தங்களுடைய கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜன்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
ரத்த பிலேட்லட்கள் எண்ணிக்கை குறைப்பு மற்றும் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.














