இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு விண்வெளி வீரர்கள் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் தங்கி வருகின்றனர். அவர்கள் அங்கு இருந்து புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர். இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பிற உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். இவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், யுனைட்டட் லான்ச் அலையன்ஸ் அட்லஸ் வி ராக்கெட்டில் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏறி சென்று ஆய்வகத்தில் ஒரு வாரம் தங்குவார்கள் என்று நாசா கூறியுள்ளது.
போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் க்ரு பைலட் டெஸ்ட் மிஷன் பைலட்டாக அவர் பயிற்சி பெற்று வருகிறார். இந்த மிஷன் வரும் மே 6ஆம் தேதி திங்கள் அன்று இரவு 10.34 மணிக்கு ஏவப்பட உள்ளது. ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கன்வரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள ஏவுதளம் 41 இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இதுவரை சுனிதா 321 நாட்கள் விண்ணில் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.