பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம். தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை இன்று முதல் வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.