இந்தியர்களுக்கு, அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால், முதல் முறையாக விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கான கால அவகாசம் 2 மாதங்களாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில், கொரோனா நோய் பரவலுக்கு பின்னர், அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், காத்திருப்பு நேரம் 3 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் தரவுகளின் படி, மும்பையில் 999 நாட்களும், ஹைதராபாத்தில் 994 நாட்களும், டெல்லியில் 961 நாட்களும், சென்னையில் 948 நாட்களும், கொல்கத்தாவில் 904 நாட்களும், பி1/பி2 விசா பெறுவதற்கு ஏற்படுகிறது. நேர்காணல் முறை தவிர்க்கப்பட்டுள்ள சிலருக்கு மட்டுமே, இதனால் பாதிப்பு இல்லை. ஆனால், ட்ராப் பாக்ஸ் திட்டம் இல்லாதவர்களுக்கு 3 ஆண்டுகள் கழித்தே நேர்காணல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் டிராப் பாக்ஸ் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அமெரிக்கா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.