சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் அவை கூடிய பின்னர் கேள்வி நேரம் நேரலை செய்யப்படும். இதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்படும். அதன்படி இன்று விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் தான் கேள்வி எழுப்பிய போது நேரலை நிறுத்தப்பட்டதாகவும், முதல்-அமைச்சர் அளிக்கும் பதில்கள் நேரலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும். மற்ற விவகாரங்களில் கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார்.