டிக்கெட் முன்பதிவில் முதியோர், பெண்களுக்கு தானாகவே கீழ் 'பெர்த்' கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது. 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.