இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒட்டு மொத்தமாக 331278 என்ற எண்ணிக்கையில் பயணிகள் வாகனங்கள் தொழிற்சாலையில் இருந்து டீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த 2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.9% உயர்வாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 42885 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், இருசக்கர வாகன விற்பனை 15.1% உயர்ந்து 1338588 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. அதில், ஸ்கூட்டர்கள் விற்பனை 19.6% உயர்ந்து 464389 ஆகவும், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 14% உயர்ந்து 839274 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வினோத் அகர்வால், "இந்தியாவில் அனைவரும் பி எஸ் 6 ரக வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனவே, வாகன விற்பனை உயர்ந்துள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், சங்கத்தின் நிர்வாக இயக்குனர், உள்நாட்டு வாகன விற்பனை கொரோனாவுக்கு முந்தைய சூழலை எட்டி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.