கேரளாவின் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் நோய் உறுதியான நிலையில் நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. பறவைக்காய்ச்சல் நோய் ஏற்படும்போது ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்படுவதுடன், கோழி மற்றும் முட்டை விற்பனை வீழ்ச்சியடைந்து கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 3-வது முறையாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீரென இறந்துள்ளது. ஏராளமான வாத்துக்கள் இறந்ததால் கால்நடை பராமரிப்புத்துறையினர் இறந்த வாத்துக்களின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் பரிசோதனை முடிவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆலப்புழா மாவட்டம் வாழுத்தனம் நகராட்சி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 1500 வாத்துகள் உயிரிழந்த நிலையில், 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.