ஔவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் நெடுமான் அஞ்சி

கிபி இரண்டாம் நூற்றாண்டில் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னன். சான்றோரும், ஆன்றோரும் நிறைந்த அதியன் குலத்தில் உதித்தவன். குடிகளைக் கண் இமைக்குள் வைத்துக் காப்பது போல் காத்து வந்த இவன், புலவர்களின் அருகாமையில், அமர்ந்து தமிழ்ப் பால் அருந்துபவன். ஔவையை தனது தமக்கையாக எண்ணியவன். பனைமாலையை அணிந்தவன். சேரர் குலத்தின் ஒரு பகுதியினராக அதியன் குலத்தவர்கள் இருந்தாலும் இருவருக்குமிடையே ஒரு பகை இருந்தே வந்தது. எப்போதுமே பழுத்த பழங்களைக் கொண்டுள்ள மரத்தைத் தேடி பறவகைள் […]

கிபி இரண்டாம் நூற்றாண்டில் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னன். சான்றோரும், ஆன்றோரும் நிறைந்த அதியன் குலத்தில் உதித்தவன். குடிகளைக் கண் இமைக்குள் வைத்துக் காப்பது போல் காத்து வந்த இவன், புலவர்களின் அருகாமையில், அமர்ந்து தமிழ்ப் பால் அருந்துபவன். ஔவையை தனது தமக்கையாக எண்ணியவன். பனைமாலையை அணிந்தவன். சேரர் குலத்தின் ஒரு பகுதியினராக அதியன் குலத்தவர்கள் இருந்தாலும் இருவருக்குமிடையே ஒரு பகை இருந்தே வந்தது. எப்போதுமே பழுத்த பழங்களைக் கொண்டுள்ள மரத்தைத் தேடி பறவகைள் வருவது போல், புலவர்கள் அதிகமான் நெடுமான் அஞ்சியைத் தேடி வந்து பாடி பரிசில் பெற்று செல்வர். அப்படி ஒருநாள் அஞ்சியைக் காண ஔவை வந்திருக்கிறார். காவலாளிகள், மன்னர் முக்கியமான ஆலோசனை ஒன்றில் ஈடுபட்டு இருப்பதால் சற்று காத்திருக்க வேண்டும் என்று கூறி, ஔவைக்கு நீர் கொடுத்து, நல்லாசனம் கொடுத்து அமர வைத்திருக்கிறார்கள். ஔவை காத்திருக்கிறார். ஆனால், அஞ்சி வந்த பாடில்லை. காத்திருந்து காத்திருந்து ஔவைக்கு பொறுமை போகிறது. கோபப்பட்ட அவர்,

“ வாயிற்காப்போனே! கொடையாளிகளின் காதுகளில் தம்முடைய சொற்களை விதைத்து, தம் காரியங்களை முடித்துக் கொள்கிறவர்கள் புலவர்கள். அவர்களுக்கு தாம் பெறும் பரிசுகளை விட, தரம் அறிந்து பாராட்டும் வரிசைதான் பெரிது.அதற்காகவே அவர்கள் ஏங்கிக் கிடப்பார்கள். அவர்களுக்காக வாசலை அடைக்காமல் திறந்து வைத்து காப்பவனே! உன்னுடைய அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் பெருமையை அறியவில்லையோ? வந்தவர்களைக் காக்க வைப்பது அவன் பெருமைக்கு இழுக்கு என்பதைத் தெரிந்துகொள்ள வில்லையோ? அவன் என்னையும் அறிந்துகொள்ள வில்லையோ? பிச்சைக்காரியைப் போலக் காத்திருக்கும் பேர்வழி நான் அல்லள் என்பதை அவன் உணர வில்லையோ! அறிவுடையோரும் புகழுடையோரும் இந்த உலகத்தில் தோன்றுகிறார்கள்; மறைகிறார்கள். பிறகு யாரும் தோன்றாத சூனிய உலகம் இல்லையே? கையில் கோடரியை யுடைய தச்சன் பெரிய காட்டில் மரத்தைத் தேடி அலையவா வேண்டும்? உபகாரியைத் தேடி நான் அலைய வேண்டியதில்லை. எந்தத் திக்கிலே சென்றாலும் அந்தத் திக்கிலே சோறு கிடைக்கும்” என்று பாடினார்.

ஒளவையின் கோபம் கண்ட வாயிற்காப்போன், ஓடிச் சென்று, அரசனிடம் முறையிடுகிறான். அதிகமான் நெடுமான் அஞ்சியோ, விரைந்து வந்து, ஒளவையின் பாதம் பணிந்து, அவர் வந்தது தனக்கு தெரிவிக்கப்படாத காரணத்தால், தான் வரவில்லை என்றும், தெரிந்து இருந்தால், தனது, முக்கிய கடமையை விட்டுவிட்டு உடனே அவரைக் காண வந்திருப்பான் என்றும் கூற,ஔவைக்கு கோபம் குறைகிறது. ஒளவையிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டு, உள்ளே அழைத்துச் செல்கிறான். உபசரிக்கிறான். இருவரும், தமிழ் பாடி மகிழ்கிறார்கள். அதிகமானின் தகடூரில் இரு நாட்கள் தங்கிய ஔவை, பின், எப்போதெல்லாம் அதிகமானை காண விரும்புகிறாரோ அப்போதெல்லாம் வருகிறார். ஆனால், அதிகமானோ ஔவைக்கு ஏதும் பரிசளிக்கவில்லை. ஒளவையும் எதிர்பார்த்து வருபவரில்லை. கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அதிகமானிடம் இல்லை. கொடுத்து விட்டால் ஔவை கிளம்பிவிடுவாரே என்ற எண்ணத்தினால் கொடுக்கவில்லை. இது இருவரிடையே இப்படி ஒரு அழகான புரிதல் இருந்தது.

இந்நிலையில் அஞ்சியின் ஆளுகையில் கஞ்ச மலை இருந்தது. அங்கே அதிசய நெல்லி மரம் ஒன்று இருந்தது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அந்த மரம் பூக்கும். பூத்தாலும் பூத்த பூக்கள் எல்லாம் பிஞ்சாவதில்லை. பிஞ்சான அத்தனையும் கிளைகளில் தங்குவதில்லை. தங்கிய அத்தனையும் பருப்பதில்லை. பருத்த அத்தனையும் பழுப்பதில்லை. அப்படிப்பட்ட நெல்லி மரத்தின் அரிய வகை நெல்லிக் கனியை உண்டால், அவர்களின் ஆயுள் கூடும். நீண்ட நாள் வாழ்வார்கள். இதனையறிந்த அஞ்சி, அந்த மரம் காக்க ஒரு காவலனை நியமிக்கிறான். அந்த மரம் பல காலங்களுக்குப் பின் பூத்து, பிஞ்சாகி, பிஞ்சுகள் உதிர்ந்து, அதில் தப்பிப் பிழைத்தவை காயாகிறது. காயானாலும் அவை மரத்தில் தாங்காமல் உதிர, இறுதியில் ஒரே ஒரு காய் கனிகிறது. கனிந்த அந்த ஒற்றை நெல்லிப் பழம் மக்களை, அயராது காத்திடும் வேந்தனுக்கே. அந்த வீரன் அந்தக் கனியை சரியான பருவத்தில் பறித்துக் கொண்டுவந்து மன்னரிடம் பயபக்தியோடு கொடுக்கிறான். மன்னன் நெடுமான் அஞ்சியோ, அதனை இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ண முடிவெடுக்கிறான்.

அப்போது ஔவை வருகிறார். வெயில் கொடுமை தாங்காது, தனக்கு தாகம் எடுத்ததாகவும், குடிக்க நீருமில்லை, உண்டு தணிக்க கனி மரமும் இல்லை என்று புலம்புகிறார். அப்போது, இறைவனுக்குப் படைக்கப்பட்ட அந்த நெல்லிக் கனியை, தங்கத் தட்டில் வைத்து, பணிப்பெண் கொண்டு வருகிறாள். இதனைக் கண்ட ஔவை, இப்படி ஒரு நெல்லிக்கனி இருந்திருந்தால் கூட அவரது தாகம் தணிந்திருக்கும் என்றும் அவரது நா வறண்டு தவிப்பதாகவும் கூற, உடனே,அதிகமான் நெடுமான் அஞ்சியோ, தட்டில் இருந்த நெல்லிக் கனியை எடுத்து, தமிழ் மூதாட்டிக்கு கொடுக்கிறார். மன்னர்பால் அன்பு படைத்த அனைவருக்கும் கோபம் மூழ்கிறது. ஔவைக்கு அந்த நெல்லிக் கனியின் பயன் தெரியாது. சுற்றி நின்றவர்களின் முகக் குறிப்பில் இருக்கும் மாற்றம் கண்டு, ஔவையார் என்னவென்று கேட்கிறார்.

அப்போது,அங்கிருந்த ஒருவர், அந்த நெல்லிக் கனியின் அருமை பெருமைகளைக் கூறி, மன்னருக்காகவென்று கொண்டு வரப்பட்டதை பறித்து உண்டுவிட்டதாக கூறுகிறார். பதறிப்போனார் ஔவை. தனக்கு அது பற்றி முன்பே தெரியாமல் போனாதால் இந்த தவறு நடந்து விட்டதாகக் கூறி வருந்தினார். உடனே, நெடுமான் அஞ்சி புன்முறுவலோடு,” அன்னையே! தாங்கள் இப்படி வருந்தக் கூடாது. இறைவனின் திருவுளப்படியே இது நிகழ்ந்துள்ளது. நான் எத்தனை காலம் வாழ்ந்தால் என்ன? நான் சில போர்களைச் செய்வேன். பலரை கொன்றிடுவேன். இந்த உலகம் எங்களைப் போல அரசர்களால் வாழ்வதில்லை. தங்களைப் போன்ற அறிவிற்சிறந்த சான்றோர்களால் தான் வாழ்கிறது. தங்களைப் போன்ற பெரும் புலவர்கள் வாழ்ந்தால் உலகம் நன்மையை உணரும். நேர்மை வழியில் செல்லும். கவி விருந்தை சுவைக்கும். ஆகையால் இந்த அரிய கனி எங்கே போய்ச் சேரவேண்டுமோ அங்கே தான் போய் சேர்ந்திருக்கிறது” என்று கூறினான்.

ஔவைக்கு அதிகமான் மீது பெரும் மதிப்பு உண்டாயிற்று. உடனே,

ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போரடு திருவில் பொலந்தார் அஞ்சி
பல்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமனி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலை
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கி
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே

என்று பாடி,” நீ ஆலகால விஷத்தைத் தன் தொண்டையில் அடக்கி உலகைக் காத்த அந்த சிவன் போல் சிறப்பாயாக” என்று வாழ்த்தவும் செய்கிறார்.

இதனைக் கேட்ட அஞ்சியோ, “அந்தக் கனியைவிட தங்களின் இந்தப் பாடல் இனிமையாக இருக்கிறது. அதை உண்டால் இந்த நாற்ற உடம்பு ஒருகால் நெடிது வாழலாம், ஆனால் இந்தப் பாடலைப் பெற்றமையால் என் புகழுடம்பு சாவாமல் வாழும்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினான்.

இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட அஞ்சிக்கு, கொல்லிமலை ஆண்ட வள்ளல் ஓரியினிடத்தே நட்பு இருந்தது. அந்த கொல்லிமலையின் மீது, சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஒரு கண் இருந்தது. அதனை தனது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. திருக்கோவிலூரை ஆண்ட காரி மூலமாக நிறைவேற்ற எண்ணினான். இருவரும் கூடிப் பேசினார்கள். அப்போது, காரி, “ ஓரி சிற்றரசன். அவனை வெல்ல தாங்கள் வரவேண்டியதில்லை நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்.ஆனாலும் சேரன் பெரும்படையை காரிக்கு துணையாக அனுப்புகிறான். சேரர் படைகளின் துணை கொண்டு ஓரியின் மீது காரி போர் தொடுக்கிறான். போரில் ஓரி உயிர் துறக்கிறான். காரி, கொல்லிமலையை சேரனிடம் ஒப்படைக்கிறான்.

ஓரி இறந்து கேட்டு, அதிகமான் துடி துடிக்கிறான். காரணம் ஏதுமின்றி போர் தொடுத்து, காரி ஓரியை கொன்றதையடுத்து காரியின் மீது அஞ்சி போர் தொடுக்க, போரில் காரி தோற்று சேர நாட்டுக்கு ஓடுகிறான். தன்னைக் காத்திடுமாறு வேண்டுகிறான். பெருஞ்சேரல் இரும்பொறை காரிக்கு அடைக்கலம் கொடுக்கிறான். அதிகமான் மீது படையெடுக்க அவனுக்கு, வழி வழியாய் வந்த பழைய பகையும் காரணமாகிறது. மீண்டும் போர் மூளுகிறது. தகடூர் கோட்டையை முற்றுகையிடுகிறான் சேரன். உள்ளிருந்த அதிகமானோ, அஞ்சாது இருக்கிறான். பல நாட்களாகியும், கோட்டைக் கதவு திறக்கப்படவில்லை. உள்ளிருக்கும் அதிகமானுக்கு எப்படி உணவு செல்கிறது என்று சேர மன்னன் குழம்பினான். அப்போது கோட்டையில் இருந்து வெளி வந்த துணி வெளுக்கும் பெண், கோட்டைக்குள் இருக்கும் சுரங்கப் பாதை வழியாக உணவு செல்வதை, சேரனுக்கு தெரிவிக்கிறாள்.

சேரன் அந்தப் பாதையை அடைக்க, வேறு வழியின்றி, தகடூர் கோட்டைக் கதவுகள் திறக்கின்றன. தமிழ்ச் சொல்லிலும், போர் தீரத்திலும் வல்லவனான அதிகாமன் கடுமையாக போர் புரிகிறான். இறுதியில் வஞ்சகர்களால் கொல்லப்படுகிறான். வீரன் ஒருவன் எறிந்த வேலை, நெஞ்சிலே தாங்கி, தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட புலவர்கள் பலரும், அழுது புலம்பி அதிகமானின் கொடைத் திறத்தை பாடுகிராகள். ஒரு நாள் அவன் கொடுத்த கொடையை விட மறு நாள் அதிகமாக இருக்குமே அன்றி, முதல் நாளை விட மறுநாள் குறையாதாம். அப்படி வள்ளல் தன்மை கொண்ட, குணக் குன்றைக் கொன்ற பழியை பெருஞ்சேரல் இரும்பொறை பெற்றுக் கொண்டான். அவனுக்கு, புலவர்கள் அதிகமானை வாழ்த்திப் பாடியதெல்லாம் நினைவில் வர, போர்க்களத்தில் மாண்டிருந்த அதிகமானைப் பார்க்கத் துணிவில்லை. தன் செயலுக்கு தானே வருந்தினான். ஆனாலும், என்ன செய்ய, தனக்காக வாழாது தமிழுக்காக, தமிழைச் சுமந்து வரும் புலவர்களுக்காக வாழ்ந்த அவனின் உயிர் திரும்ப வருமா? ஆனால்! அவன் தமிழுக்கும், தமிழ் மூதாட்டி போன்ற தமிழ்ப் புலவர்களுக்கும் கொடுத்த கொடையை வானும் மண்ணும் உள்ளவரை இப்பூவுலகம் புகழ்ந்திருக்கும்.

51
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu