வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த 29 தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அவர்களின் வீட்டிற்குள் கும்பலாக புகுந்து சூறையாடி வருகின்றனர். இதுவரை கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 29க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குமிலா என்னும் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஆலமின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதில் ஆறு பேர் உயிரிழந்தனர். அதேபோல் சத்கிராவில் அவாமி லீக் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் 10 பேர் பலியாகி கொல்லப்பட்டனர். சிமுல் எம்.பி யின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் நான்கு பேர் பலியாகினர். அதேபோல் இக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர்கள் இருவரின் உடல்கள் போக்ராவில் கண்டெடுக்கப்பட்டது. இக்கட்சியின் இணை பொது செயலாளர் சுமன் கான் வீடு தீ வைக்கப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர்.