அயோத்தியில் அடுத்தாண்டு டிசம்பரில் ராமர் கோவில் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2020ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறுகையில், கோவில் கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்தாண்டு டிசம்பரில் கோவில் திறக்கப்பட்டு மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
கோவில் கட்டுமானத்துக்கான நிதியில் எந்தப் பிரச்னையும் இல்லை. மகாலட்சுமி உடன் இருக்கையில் கடவுளுக்கான இந்தப் பணியில் பணம் ஒரு பிரச்னையாக இருக்க முடியாது என்றார். மேலும் ராமர் கோவில் கட்டுமான பணிகளுடன் வளாகத்தை சுற்றி பல சிறிய கோவில்களின் கட்டுமான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதோடு சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.














