அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு ரூ.1800 கோடி செலவாகும் என்று அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 ஆகஸ்ட் 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய் கூறுகையில், கோவில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய ஹிந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2023 டிசம்பரில் கோவிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.