கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும். எனவே, பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், ‘அய்யன்’ என்ற கைபேசி செயலியை கேரள வனத்துறை வெளியிட்டுள்ளது.
‘அய்யன்’ செயலியில், சபரிமலை சார்ந்த பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக்கும் இடம், தங்கும் வசதிகள் கொண்ட இடங்கள், கழிப்பறை வசதிகள் இருக்கும் இடங்கள், குடிநீர் விநியோகிக்கும் மையங்கள் போன்ற பல்வேறு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெருவழி, சிறுவழி, புல் மேடு ஆகிய வழித்தடங்களில் இருந்து சன்னிதானம் வரை செல்வதற்கான தூரம், நடை திறக்கப்படும் நேரம் ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.