நாட்டில் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
பீகாரின் அராரியா நகரில் இன்று காலை 5.35 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை 10.10 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.