எழுத்தாளர் உதயசங்கருக்கு அவரது ஆதனின் பொம்மை நாவலுக்காக பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் இலக்கியத்திற்காக பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர், கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் எழுத்தாளராக வலம் வருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேலான எண்ணிக்கையில், கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், சிறுவர் இலக்கியங்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை அவர் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில், பொம்மைகளின் நகரம், மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், அலாவுதீனின் சாகசங்கள் உள்ளிட்ட சிறுவர் இலக்கியங்கள் மிகவும் கவனம் பெற்றவை ஆகும். இவரது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, 2023 ஆம் ஆண்டின் பால புரஸ்கார் விருது மேலும் ஒரு கௌரவத்தை சேர்த்துள்ளது.