சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையொட்டி, இயங்கி வரும் சன் பார்மா மருந்து உற்பத்தி நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இதை எதிர்த்து மீனவர் நலச்சங்கத்தின் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 1994ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது சட்டவிரோதம் என கூறி சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நிறுவனம், விரிவாக்க பணியால் நிலத்தடிநீர் பாதிப்படையவில்லை. எனவே, அபராதம், ஆலையை ஆய்வு செய்ய தடை கோரி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், சன் பார்மா நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.10.58 கோடி அபராதத்தை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.