உலகில், பசுமை குடில் வாயுக்களின் உமிழ்வு அதிகரித்து வருவதால் புவி வெப்பமயமாதல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக, வாகனங்கள் மூலமாகவே அதிக உமிழ்வு ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பாவில் 2035 முதல், புதிய பெட்ரோல் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசுமை குடில் வாயுக்களின் உமிழ்வை, வரும் 2030 க்குள் 55% குறைக்க ஐரோப்பிய யூனியன் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. மேலும், அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்குள், கார்பன் உமிழ்வை முழுமையாக கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன் பகுதியாக, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் துணை கொண்டு இயங்கும் இன்டர்ணல் கம்பஷன் (உள்ளெரி) என்ஜின் கொண்ட வாகனங்களுக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. வரும் 2035 முதல் இதனை அமலுக்கு கொண்டு வர உறுப்பு நாடுகள் திட்டமிட்டுள்ளன. மேலும், வாகனத் தயாரிப்பாளர்களுக்கு கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.