பதஞ்சலியின் 5 மருந்துகள் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டதாக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
யோகா குரு ராம்தேவின் திவ்யா பார்மசி நிறுவனத்தால் பிபி கிரிட், மது கிரிட் , தைரோகிரிட், லிபிடோம், ஐ கிரிட் கோல்ட் என்ற 5 மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்ட், கொலஸ்ட்ரால், கண் நோய்க்காக இவை பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் குறித்து பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை அளிப்பதாக கேரளாவை சேர்ந்த கே.வி.பாபு என்பவர் உத்தரகாண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி உரிம ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, உத்தரகாண்ட் ஆயுர்வேதா, யுனானி உரிம ஆணையம், இந்த 5 மருந்துகளுக்கும் கடந்த 9ம் தேதி தடை விதித்தது. பிரதமர் மோடியும் ராம்தேவும் மிகவும் நெருக்கமானவர்கள். அவருடைய மருந்துகளுக்கு பாஜக அரசு தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகள் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு நேற்று திடீரென அறிவித்தது.