'ஜான்சன் அண்டு ஜான்சன்' பவுடர் விற்பதற்கான தடை நீக்கபட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மஹாராஷ்டிர மாநிலம் முலந்தில் உள்ள ஆலையில் குழந்தைகளின் உடல் பராமரிப்பு பவுடர்களை தயாரிக்கிறது. இந்த ஆலைக்கான உரிமத்தை ரத்து செய்தும், உற்பத்தியை நிறுத்த உத்தரவிட்டும், விற்பனைக்கு தடை விதித்தும் மஹாராஷ்டிர அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. இதை எதிர்த்து அந்த நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'உற்பத்தியைத் தொடரலாம்; ஆனால், விற்பனை செய்யக் கூடாது' என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், கடந்த சில மாதங்களில் இந்நிறுவனத்தின் பவுடர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமிலத்தன்மை நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால், இந்நிறுவனத்தின் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தடை நீக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.