தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்நிலையில்,அரசின் இந்த அறிவிப்பாணை மற்றும் குற்ற நடவடிக்கைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது.
அப்போது நீதிபதிகள், அவசர நிலை கருதியும், பொதுநலன் கருதியும் குட்கா, பான் மசாலாபோன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தில், துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.