டெல்லியில் நிலக்கரி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக பல ஆயிரம் கிலோ நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதிகளில் தொழில்துறை மற்றும் இதர பயன்பாடுகளில் நிலக்கரி பயன்பாட்டை தடை செய்ய மத்திய அரசின் தர நிர்ணய மேலாண்மை ஆணையம் முடிவு செய்தது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி உடல்களை தகனம் செய்வதற்கும், உணவகங்களில் சமைப்பதற்கும் மரம் அல்லது மூங்கில் விறகை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணிகளை இஸ்திரி செய்ய மரக் கரியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத எரிபொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அவற்றை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.