உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் தென் கிழக்கு ஆசிய அமைப்பின் அடுத்த இயக்குனராக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அமைப்பின் இயக்குனர் பதவிக்கான போட்டியில் இவரும் நேபாளத்தை சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஷம்பு பிரசாத் ஆச்சாரியவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் தில்லியில் நடைபெற்று வரும் இந்த அமைப்பின் 76 வது கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சைமா வாசித் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வில் இந்தியா உட்பட 10 நாடுகள் ரகசிய வாக்கெடுப்பில் ஈடுபட்டன. இதில் வாசித்திற்கு எட்டு வாக்குகளும் ஆச்சாரியாவுக்கு இரண்டு வாக்குகளும் கிடைத்தன. இந்த தேர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய கூட்டத்திடம் சமர்ப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி இந்த அமைப்பின் இயக்குனராக சைமா வாசித் பதவி ஏற்பார். அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். இந்நிலையில் தன்னை தேர்வு செய்ததற்காக உறுப்பு நாடுகளுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளார்.