வங்கதேசத்தில் இரண்டாவது நாளாக ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் தங்களுடைய வீடுகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து இரண்டாவது நாளாக சிறுபான்மையின மக்களான ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தின் டாக்கா மற்றும் செட்டாகிராம் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இதனால் டாக்காவின் மத்திய பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகியபின் 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. அங்குள்ள பல வீடுகள், இந்து கோயில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தின் போது சிறுபான்மையினரை துன்புறுத்துவோர் மீதான விசாரணைகள் விரைவு படுத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த போராட்டத்தில் இவர்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவர்களும் ஈடுபட்டனர்.