கடந்த 6 வருடங்களில், வங்கிகள் வழங்கிய 11.17 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பகவத் காரத், இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், 66543 கோடி வருவாய் ஈட்டிய பொதுத்துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில் 40992 கோடி வருவாயை ஈட்டி உள்ளதாகக் கூறினார்.
வங்கிகளின் கணக்குகளை சரிபார்க்கும் முறையாக, வழக்கமாக, மத்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு முறைகளின் படி, கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில், கடந்த 6 வருடங்களில், பொதுத்துறை வங்கிகள் 816421 கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளன. மேலும், பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் 117883 கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளன. அத்துடன், கடந்த 6 வருடங்களில், 515 மோசடி வழக்குகள் ‘வங்கி கடன்’ தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.














