நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை உயிரிழந்தது.
இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் பீச் பகுதியில் காணப்பட்டது. மாலை நெருங்கும்போது கடற்கரை ஓரத்தில் ஒதுங்கின. உடனே மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஈர்ப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு இரவு முகாமை அமைத்தது. அந்த துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி, "ஒரே இரவில் 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, மேலும் ஆழமான பகுதிகளுக்கு நீந்தி செல்ல ஊக்குவிப்பதுதான் தற்போது எங்கள் நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்" என கூறினார்.
கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர். இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள்.