தனியார் வாகன போக்குவரத்து சங்கங்களின் மூலம் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சக்தி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் வாடகைக்கார்கள் ஆகிய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை எதிர்த்து தனியார் பஸ் நிறுவனங்களும், ஆட்டோ டிரைவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் இலவச பயணம் செய்யும் சக்தி திட்டத்தை தனியார் பஸ்சுக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு 10000 உதவி தொகை வழங்க வேண்டும், அமைப்புசாரா போக்குவரத்து மேம்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தனியார் பஸ்,ஆட்டோ, வாடகை கார்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு அடைப்பு நேற்று நள்ளிரவு 12 முதல் தொடங்கியுள்ளது. இதில் எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க பெங்களூருவில் போலீசார் தீவிர பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.