பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேம்ஸ் கிராப்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனம், சுமார் 21000 கோடி ரூபாயை, வரிகள் மற்றும் அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், இதற்கான நோட்டீஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தசரா விடுமுறைக்கு பின்னர் தொடங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வருட டிசம்பர் மாதத்தில், ஜிஎஸ்டி அதிகாரிகள், கேம்ஸ் கிராப்ட் நிறுவனத்தின் வளாகத்தில் சோதனை நடத்தினர். நிறுவனத்தின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் போன்றவற்றை பரிசோதித்ததில், 460 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதனால், அபராதம் செலுத்துமாறு நிறுவனத்திடம் கூறப்பட்டது. இதற்கு எதிராக, நிறுவனத்தின் சார்பில், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் போன்றவற்றை சமர்ப்பித்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, ஜிஎஸ்டி அதிகாரிகள், புதிய நோட்டீஸ் ஒன்றை அனுப்பி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜிஎஸ்டி அதிகாரிகளின் அறிக்கை படி, இந்த நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 4000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. அதற்கு செலுத்த வேண்டிய வரி, வட்டி மற்றும் அபராதம் போன்றவை 21,000 கோடி வரை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நிறுவனங்களுக்கான 28% ஜிஎஸ்டி வரி விதிப்பை கணக்கிட்டு இந்த தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேம்ஸ் கிராப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்தியாவின் யூனிகார்ன் அந்தஸ்தில் உள்ள எங்கள் நிறுவனம், வரி செலுத்துவதில் தனது கடமையை தவறாமல் செய்து வருகிறது. ஜிஎஸ்டி அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 28% வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 18% வரி மட்டுமே செலுத்த வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில், 21000 கோடி ரூபாய் அளவிலான பெரும் தொகை இதுவரை விதிக்கப்படாததால், இந்தச் செய்தி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.