பரத நாட்டியம்

June 21, 2022

தமிழர்களின் ஆடல்கலையின் நீட்சியே ‘பரதநாட்டியம்’ ஆகும் ...

தமிழர்களின் ஆடல்கலையின் நீட்சியே ‘பரதநாட்டியம்’ ஆகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பலன் எதிரச் சொன்ன பக்கமும்”

என்றத் தொல்காப்பியப் பாடல், ஆடல் பாடலைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தக் கலை வகுப்பினர் பற்றிக் கூறுகிறது. தமிழர்கள் நீண்டக் காலமாகவே ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியதற்கு இந்தப் பாடல் வரிகளே சான்று.

தமிழகத்தின் மாநில நடனம் பரதநாட்டியம். பல்லாண்டுக் காலமாகவே இந்தத் தொன்மையானக் கலைத் தமிழரின் கலையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த நாட்டியக்கலைக்கு "பரதம்" என்றப் பெயர் பிற்காலத்தில்தான் வந்தது. முற்காலத்தில் இது "கூத்து" என்ற சொல்லால் அறியப்பட்டது. கூத்துக் கலையை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட மக்கள் "கூத்தர்" என்று அறியப்பட்டனர். ஆண்கள் கூத்தர் என்றும், பெண்கள் விறலியர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப் படுகின்றனர். “எண் வகைச் சுவையும் மனத்தின் கண்பட்டக் குறிப்புகளும் புறத்துப் போர்ந்துப் புலப்பட ஆடுதல் விறல்” என்ற விளக்கம் இலக்கியத்தில் கூறப்படுகிறது. இதன் மூலம், இக்கால பரதநாட்டியமே விறல் என்று முன்னாளில் அறியப்பட்டது தெளிவாகிறது.

மலைபடுகடாம் நூலில் விறலியர் கடவுள் வாழ்த்துப் பாடி இந்தக் கலையை ஆடத் துவங்கும் செய்திக் கூறப்படுகிறது. "செல்லாமோ தில் சில்வளை விறலி" என்றப் பாடல் வரி இதனை உணர்த்துகிறது. மேலும், பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர் என்றும் கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர் என்றும் இலக்கியங்களில் இந்தக் கலையைப் பயில்பவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராணவியல் ரீதியாக, பரத முனிவர் இயற்றிய நாட்டிய சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டதால் பரத நாட்டியம் எனப் பெயர்பெற்றது என்றுக் கூறுவார்கள். மேலும் கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பலப் பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப", "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாகக் கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். இந்தக் கலையின் கடவுளாக சிவபெருமான் அறியப்படுகிறார். ஆடல் கோலத்தில் இருக்கும் நடராஜர் வடிவமே இக்கலையை வணங்குவோர் போற்றும் கடவுள் ஆவார். எந்த வித உணர்ச்சியையும் இந்த நடனத்தின் மூலம் உணர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே உலக மக்களை இந்தக் கலையை நோக்கி ஈர்த்து வருகிறது.

இன்று இந்தக் கலைப் பல இடங்களில் பயிற்றுவிக்கப் படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டவர் இந்தக் கலையை விரும்பிக் கற்றுக் கொள்கின்றனர். பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். பரதநாட்டியத்தில், இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காகப் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள், நகைகள் மற்றும் சலங்கைகள் அணிந்திருப்பார். இந்த நடனத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த, உடல் அசைவுகளும் கை முத்திரைகளும் பயன்படுகின்றன. அவ்விரண்டையும் ஒன்று சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ளச் சிற்பங்களில் இவைச் செதுக்கப்பட்டுள்ளன. பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,

"கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல"
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர"

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலையைக் கொண்டாடத் தமிழர்களால் ஒரு விழா எடுக்கப் படுகிறது. நாட்டியத்தின் மூலம் இறைவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எடுக்கப்படும் விழா என்பதால் "நாட்டியாஞ்சலி" என்று அவ்விழா அழைக்கப்படுகிறது. இது சிதம்பரம் கோவிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவில், நடராஜரின் முன்னிலையில் கலைஞர்கள் தங்கள் செவ்வியல் நடனமானப் பரதநாட்டியத்தைச் சமர்பித்து, இறைவனை வழிபடுவர். இதுவே நாட்டியாஞ்சலித் திருவிழாவின் சிறப்பாகும். இவ்வாறு, பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தேக் கொண்ட இந்த நடனக் கலை உலகினர் பலரையும் ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu