இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பார்தி ஏர்டெல், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 89% உயர்ந்து, 2145 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர அடிப்படையில், நிறுவனத்தின் வருவாய் 22% உயர்ந்து, 34527 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், “முதலுக்கேற்ற வருவாய் கிடைப்பதற்கு மேலும் கவனம் செலுத்தப்படும். தற்போது, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
சராசரியாக, ஒரு பயனாளர் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாய், கடந்த காலாண்டில் 190 ரூபாயாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது 153 ரூபாயாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பலதரப்பட்ட பயனாளர்கள், சாதாரண கைபேசியில் இருந்து ஸ்மார்ட்போன்களுக்கு மாற முன் வந்ததாலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த துவங்கி உள்ளதாலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.