இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமாக ஓலா உள்ளது. இந்த நிறுவனம், தற்போது புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தரவரிசை பட்டியலில் முன்னணியில் உள்ள கார்கள் மற்றும் ஓட்டுநர்களைப் பெறுவது, கேன்சல் கட்டணங்கள் இல்லாமல் பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட பிரீமியம் சேவைகள் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படுகின்றன. ‘ஓலா பிரைம் பிளஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரீமியம் சேவை, தற்போதைய நிலையில், சோதனை அடிப்படையில் பெங்களூரு நகரில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஓலா பிரைம் பிளஸ் பிரீமியம் சேவை குறித்த அறிவிப்பை, ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். மேலும், பெங்களூரில் உள்ள குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சேவை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதே வேளையில், பிரீமியம் சேவைக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்படவில்லை.