அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சர்வதேச வர்த்தக ஆலோசனைக் குழுவில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
டெலாய்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி புனித் ரஞ்சன் மற்றும் பெடெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சுப்ரமணியம் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இந்த குழுவில், மனை வணிகம், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் துறை, தேசிய பாதுகாப்பு, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மார்க் எட்வின் இந்த குழுவின் தலைவராக செயல்பட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிப்பது, ஏற்றுமதியை உயர்த்துவது, வர்த்தகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றில் இந்தக் குழு ஜோ பைடனுக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.