அமெரிக்கா சட்டப்பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்ய இரண்டாவது முறையாக முன்வந்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள சட்டப்பேரவையின் அனுமதியின்றி அமெரிக்கா அவசரகால முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது. இதில் அது கடும் விமர்சனங்களை உலக நாடுகளிடமிருந்து பெற்று வருகிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிலிங்கன் இது குறித்து கூறுகையில், அவசர கால அடிப்படையில் 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான போர் தளவாடங்கள் மற்றும் கருவிகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்ய உள்ளோம் என்றார். இஸ்ரேலின் தற்காப்புக்கான அவசிய தேவையை முன்னிட்டு செயலர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி அளித்துள்ளார். சட்டப்பேரவைக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா கவனம் செலுத்துவது அமெரிக்க தேசிய நலன்களில் ஒன்று என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜோ பைடன் முடிவெடுப்பது இது இரண்டாவது முறையாகும். அதோடு அப்பாவி மக்கள் இந்த போரில் பலியிடப்படுவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் இவ்வாறு பரிமாற்றம் நடைபெறுவது வழக்கமானது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.