காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடுத்த வாரம் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளும், ஹமாஸ் பிரதிநிதிகளும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடென் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படும் சூழல் மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்ற போதிலும் வரும் திங்கள் கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். அப்படி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதலை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் வாக்களித்துள்ளது. இதன் மூலம் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கி விட்டதாக ராய்டர்ஸ் நிறுவனம் நேற்று கூறியது.