ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் வலியுறுத்தினார்.
ஏஐடியுசி தென்சென்னை மாவட்டம் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய செயலாளர் வஹிதா நிஜாம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
மின் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரமாக உயர்த்தவேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கேரளாவை போன்றே தமிழக அரசும் செயலி மூலம் ஆட்டோ, டாக்ஸிகளை முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அவர்களின் வருமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.