திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் மீண்டும் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது.
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27ல் தேர்தல் நடந்தது. அங்கு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஐ.பி.எப்.டி., - பா.ஜ.,. கூட்டணி 60 தொகுதிகளில் போட்டியிட்டு 33 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி., எனப்படும், தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க ஆளும் என்.பி.பி., கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ.,வின் ஆதரவை கோர அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் நாகாலாந்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்.டி.பி.பி., 25 இடங்களிலும், பா.ஜ., 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 37 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.