பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் இன்று விமான நிலையம் அருகே ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் சூழ்நிலையில், பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் இன்று விமான நிலையம் அருகே ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தின. கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த இந்த வெடிப்புகள் பல அடி உயர கரும்புகையுடன் சூழலை பதற்றமாக்கின. தொடர்ந்து கேட்கப்பட்ட பலத்த வெடிப்பு சத்தங்கள் மக்கள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்த, அபாய ஒலி ஒலிக்கப்பட்டதையடுத்து, பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். லாகூர் விமான நிலையத்திலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
வெடிப்பு சம்பவங்களை போலீசார் உறுதி செய்துள்ளனர். குறிப்பாக வால்டன் சாலையில் பெரிய அளவில் குண்டு வெடித்தது மற்றும் இது டிரோன் தாக்குதலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.