கடல் நீர் பரப்பில் வெப்பநிலை உயர்வு காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகள் வெளிறிப் போவதாக தெரியவந்துள்ளது. மேலும், இது இயற்கையின் எச்சரிக்கை மணியாக உள்ளது என்று சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இயல்பான அளவைவிட கூடுதலாக மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் பரப்பின் வெப்பநிலை உயர்வதாக அறிக்கை ஒன்று வெளியானது. அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில் மன்னார் வளைகுடா பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வுக் கழகத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, வெப்பநிலை உயர்வு காரணமாக, வெளிறிப் போகும் பவளப்பாறைகள் படிப்படியாக மரணம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கம் வாக்கில் பவளப்பாறைகள் வெளிறிப் போக தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.