உலகின் முதல் முழுமையான ஆவணமற்ற விமான நிலையமாக அபுதாபியின் ஜாயத் சர்வதேச விமான நிலையம் மாறுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டில், இதற்கான ஸ்மார்ட் டிராவல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், பயணிகள் பாஸ்போர்ட், அடையாள அட்டை அல்லது டிக்கெட் இல்லாமல் விமானங்களில் ஏற அனுமதிக்கபடுவார்கள். விமான நிலையத்தின் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் இது சாத்தியப்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூர், ஹாங்காங்க், டோக்கியோ மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் ஏற்கனவே இதே போன்ற பயோமெட்ரிக் அமைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், முழுமையான பயோமெட்ரிக் விமான நிலையமாக அபுதாபி உருவாகிறது. பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்க மற்றும் விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த கைரேகை மற்றும் முக அடையாளம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பம் அபுதாபியில் கொண்டு வரப்படுகிறது. பயோமெட்ரிக் தொடர்பாக 2023 ஆம் ஆண்டில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) நடத்திய ஆய்வில், 75% பயணிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.