போயிங் விமான நிறுவனம், இந்தியாவில் ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்த உள்ளது. இதற்காக, பெங்களூருவில், 43 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்நுட்ப வளாகம் ஒன்றை கட்டமைக்க உள்ளது. போயிங் நிறுவனம், அமெரிக்காவுக்கு வெளியே பெரும் ஆராய்ச்சி வளாகம் அமைப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய ஆராய்ச்சி பணிகளுக்காக, சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
போயிங் நிறுவனம், 4 பேர் அமரக்கூடிய, பறக்கும் மின்சார வாகன ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், இந்திய பாதுகாப்பு துறைக்கு, நவீன ஹெலிகாப்டர்கள் வழங்குவது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள திறமையான பணியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றனர். தற்போதைய நிலையில், போயிங் இந்தியா நிறுவனத்தில், சுமார் 4000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில், 3000 பேர் பொறியாளர்கள் ஆவர். இந்த எண்ணிக்கையை 25% உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆராய்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.