கால்பந்து விளையாட்டின் அரசனாக வர்ணிக்கப்படும் பீலே, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, 82 வயதாகும் அவரது மறைவுக்கு, 3 நாட்கள் பிரேசிலில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ தெரிவித்துள்ளார்.
பீலே, சர்வதேச அரங்கில் பிரேசில் நாட்டிற்காக 14 ஆண்டுகள் கால்பந்து விளையாடி உள்ளார். பிரேசிலுக்காக அவர் விளையாடிய 92 ஆட்டங்களில், 77 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன், அவரது மொத்த கால்பந்து கேரியரில் 700 ஆட்டங்களில் 655 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன், கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். மேலும், இவர், பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.