பிரேசில் நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில், பிரேசில் நாட்டில் வரலாறு காணாத டெங்கு பரவல் ஏற்பட்டுள்ளது. நாடெங்கிலும் 512000 டெங்கு பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு உயர்வாகும். மேலும், டெங்கு பாதித்தவர்களில் 425 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இந்த ஆண்டு 4 வகையான டெங்கு வைரஸ் பாதிப்புகள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 15 ஆண்டுகளில் பார்த்திராத புதுவித பாதிப்பு என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பிரேசில் நாட்டை பொறுத்தவரை, பிப்ரவரி மாதத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தருவர். எனவே, டெங்குவை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.