ஜெர்மனியில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் குடியுரிமை பெறுவதில் உள்ள சிக்கல்களை குறைக்கும் விதமாக புதிய மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாட்டில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் கூட குடியுரிமை பெறுவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சிக்கல்களை தீர்க்கும் விதமாக புதிய மசோதா ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா 382-234 எனும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களில் 23 பேர் இதற்கு வாக்களிக்கவில்லை. இந்த மசோதாவை ஜெர்மன் பிரதமர் ஓலா ஸ்கூல் கொண்டு வந்தார்.
தற்போதைய சூழலில் ஜெர்மனியில் 8 ஆண்டுகளாக வசித்தவர்கள் மட்டுமே குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். அப்படி இருக்கும்போது இந்த மசோதா சட்டமானால் ஜெர்மனியில் ஐந்து வருட காலங்கள் வசித்தவர்கள் கூட குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும். அதோடு இனி இரட்டை குடியுரிமை அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஓலா கூறுகையில், பல தலைமுறைகளாக ஜெர்மனியில் வசித்து வந்தவர்களுக்கு இந்த புதிய குடியுரிமை சட்டம் பயனளிக்கும். பல ஆண்டுகளாக இந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர்கள் இனி ஜெர்மன் நாட்டவர்கள் ஆவர் என்று கூறினார். ஜனாதிபதி வால்டர் இந்த மசோதாவில் கையெழுத்திட்ட உடன் இது சட்டமாக அறிவிக்கப்படும். இதற்கு முன்பு அயல் நாட்டினர் ஜெர்மன் குடியுரிமை பெற ஜெர்மன் முன்னோர்களின் வம்சமாக அவர்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்கிடையே இந்த சட்டம் ஜெர்மன் குடியுரிமையை மலிவாகிவிடும் என்று எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றனர்.