நடப்பு ஆண்டில், குறைவான பருவமழை காரணமாக, கரீப் சாகுபடி மிகவும் பாதிப்படைந்துள்ளது. சுமார் 383.99 லட்சம் ஹெக்டேர் அரிசி சாகுபடியில் 5.62% சாகுபடி குறைந்துள்ளது. இதனால், அரிசிக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்திய அரசு, குருணை அரிசி எனப்படும் உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பாசுமதி அல்லாத பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய 20% வரி விதித்துள்ளது. இதனால், அரிசி ஏற்றுமதி வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில், அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது (சீனா முதலிடத்தில் உள்ளது). மேலும், உலகின் 40% அரிசி வர்த்தகம் இந்தியாவைச் சார்ந்து இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் 21.2 மில்லியன் டன் அரிசி இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 3.94 மில்லியன் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாசுமதி அல்லாத பிற வகை அரிசி ஏற்றுமதியின் மதிப்பு 6.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. சுமார் 150 நாடுகளுக்கு இந்திய அரிசி ஏற்றுமதி ஆகியுள்ளது. இந்தியா, குறைந்த விலையில் அரிசி ஏற்றுமதி செய்வதால், நைஜீரியா போன்ற ஏழை நாடுகள் மிகவும் பயனடைந்து வந்தன. ஆனால், தற்போதைய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக, பல நாடுகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி தடை காரணமாக, பல நாடுகள், தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யத் தொடங்கும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனால் உலக வர்த்தகம் மிகவும் மாற்றமடையும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. அதனால், மைதா, ரவை, சேமியா உள்ளிட்ட கோதுமை உபபொருட்கள் வர்த்தகமும் பாதிப்படைந்தது. அது போலவே, தற்போதைய அரிசி ஏற்றுமதி தடையும் பல்வேறு வர்த்தக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். சீனா, இந்தியாவின் உடைத்த அரிசி இறக்குமதியாளர்களில் முதன்மையானதாகும். தற்போது உடைத்த அரிசி ஏற்றுமதி தடை செய்யப்படுகிறது. இதனால், சீனா மட்டுமின்றி, மனித உணவுக்காக உடைத்த அரிசி இறக்குமதி செய்யும் ஆப்பிரிக்க நாடுகளும் பாதிப்படையும்.
ஏற்றுமதி தடை குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னர், பல இடங்களில், ஏற்றுமதிக்காக, ஏற்கனவே துறைமுகங்களுக்கு உடைத்த அரிசி அனுப்பப்பட்டு விட்டது. மேலும், சில இடங்களில் ஏற்றுமதிக்கான ரசீதுகள் பெறப்பட்டு விட்டன. அதனால், வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை, உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.